March 28, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

11 min read
கல்வெட்டு

கல்வெட்டு

சீனாநாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு:


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக் கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறை முகங்களிலும் தங்கிப் பிறகு வியத்துநாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக்கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த வழி சுற்று வழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத் தொலைவு நீளும். மேலும் பயண நேரத்திலும் பலமாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய்கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப்பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப்பெற்ற சீனச்சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல்நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக்கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.  சீனச்சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சகயுகம் சித்திரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம்ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்கவைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங்நகரைக் கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப் பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.  பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர்.  அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகரபாண்டியன் ஆவான். இரு நாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீனசக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது.  இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர் காலச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published.