April 20, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்

9 min read
உணவு

உணவு

தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.
நம் உணவு முறையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பதே போதுமானது. எனினும் பழக்கத்தை மாற்ற இயலாதவர்கள் மூன்று முறை உண்ணலாம். சாப்பிட்ட சாப்பாடு வெளிவரும் வண்ணம் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. வயிற்றில் பாதியளவு உணவு, கால்பகுதி தண்ணீர், அடுத்த கால்பகுதி காற்றின் வருகைக்கு ஏற்றபடி வயிற்றில் இடம்விட்டுச் சாப்பிடுவதே மிதஉணவுப் பழக்கமாகும்.

அதிக அளவிற்கு உண்டால் நோய் வரும். ஆயுள் குறையும். எனவே எப்போதும் வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்ணக்கூடாது. அளவிற்குக் குறைவாக உண்டாலும் உடலில் சக்தி குறையும். எனவே தேவையான அளவு அதாவது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்ண வேண்டும். நமக்குப் பசியே இல்லாத பொழுது கடனே என்று, மேலும் மேலும் உண்ணக்கூடாது. பசித்தே புசிக்க வேண்டும். பகலில் உணவு சிறப்பான விருந்தென்றால் இரவில் எதுவும் உண்ணக்கூடாது. மன உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அரிசி உணவு குறைவாகவும், கோதுமை, பால், வெண்ணெய், தேன், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, தக்காளிச்சாறு, ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, பசலைக்கீரை, புடலங்காய், பாகற்காய், ஆகிய ஊட்டச்சத்துக்களையும், புதிய காய்கறிகளையும் நிறைய உண்ண வேண்டும்.

உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, உணவு அதிகம் தேவை. இவர்கள் அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். அதனால் நாள் முழுதும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக் கொண்டு அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது. இது மேலும் இவர்கள் கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவுப் பொருட்களைக் குறைத்தால் வீணாக உடலில் கூடும் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
மூன்று வேளையும் அதிக உணவுகளை உண்பவர்கள் தம் உடலில் தேவை இல்லாத நோய் வளரத் தானே காரணமாக அமைந்துவிடுகின்றனர். இவ்வாறு அதிகம் உண்பதால் இரைப்பையின் உறுதித்தன்மை குறைந்து தொப்பை உண்டாகிறது. வயது முதிர்ந்த பொழுது, பாதியளவே உண்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.

இதில் சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு புடைக்க உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published.