April 16, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

பீட்ரூட்

40 min read
பீட்ரூட்

பீட்ரூட் – மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது, மற்றும் பல்வேறு சுவாரஸ்ய நல்ல தகவல்கள் 
**************************************************
பீட்ரூட்

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது. 

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது.

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது. 

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்

இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற சிகிச்சைமுறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.

அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்காமல், பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான் என்கிறார் அவர்.
அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
எனவே சிறுநீரின் நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள், பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் யோசனை.

தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் எனவும், இதனால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி, லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா கூறியதாவது : ஒருவர், தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதை குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறையும். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் போது, பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட், சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சிறிது குறைகிறது. பழங்களும், பச்சைக் காய்கறிகளும் வயிற்றில் சென்று அடையும் மாற்றம் குறித்த ஆய்வில், இந்த உண்மை தெரிந்தது. எனவே பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என அம்ரிதா அலுவாலியா கூறினார்.

இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!


அல்சர் 

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு 

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய் 

மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரல் கோளாறுகளுக்கும்பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

இரத்த சோகை 

பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய் 

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் 

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொலஸ்ட்ரால் 
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை 

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும் 

பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி 

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு 

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண் 

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு 

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

பீட்ருட்டின் வரலாறு: 

தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பீட்ரூட் கிழங்கை எடுத்துத் தலைவலிக்கும் பல்வலிக்கும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். நியூசிலாந்தில் வேரை மட்டும் சாப்பிட்டார்கள். முதலில் பீட்ரூட் உருளை வடிவத்திலும் சற்று நீண்ட ஓவல் வடிவத்திலும் ஆழ்ந்த சிவப்பு நிறத்திலும் தங்க வண்ணத்திலும் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் மக்கள் இதைச் சாப்பிட ஆரம்பித்தனர். 200 ஆண்டுகள் கழித்துத்தான் இது பிரபலமாகியது. பீட்ரூட்டின் விசேஷம் அதன் இனிப்பு. எல்லா காய்கறிகளையும்விட அதிக சர்க்கரை இதில் உள்ளது. 

1750-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட சண்டையின் போது இங்கிலாந்து ஐரோப்பிய துணை கண்டங்களுக்கு கரும்பு அனுப்ப மறுத்து விட்டது. இதனால் அந்த நாடுகளில் சர்க்கரை தட்டுப்பாடு வந்தது. நெப்போலியனும் பிரெஷ்யா நாட்டு மன்னனும் சேர்ந்து அதிகப்படியான பீட்ரூட்டை உற்பத்தி செய்து அதிலிருந்து சர்க்கரை எடுக்கும் முயற்சியைச் செயல்படுத்தினார்கள். உலகளவில் எவ்வளவு கரும்பு உற்பத்தி செய்கிறார்களோ, அதே அளவு ஐரோப்பாவிலும் 1900-ல் உற்பத்தி செய்யப்பட்டு சர்க்கரை தயாரிக்கப்பட்டது.

வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். 2 இன்ச் விட்டம் அளவுள்ள காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்கவேண்டும். பீட்ரூட் விளையும்போது ஒரு கிழங்குக்கும் அடுத்த கிழங்குக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துவதற்காக இடையில் இருக்கும் ஒரு பிஞ்சு பீட்ரூட்டைப் பிடுங்கிவிடுவார்கள். இந்த பீட்ரூட் சாப்பிட பயங்கர ருசியாக இருக்கும்.

பாதுகாப்பது:

ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். காலையில் சமைக்க இரவில் தண்ணீர் தெளித்து வைத்தால் பசுமையாக இருக்கும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். ஆனால் காயை பிளாஸ்டிக் பையில் போட்டால் இரண்டு வாரங்கள் கூட இருக்கும். அமெரிக்காவில் டின்னில் அடைத்த பீட்ரூட்தான் பிரபலம்.

சமைப்பது எப்படி?

பீட்ரூட்டின்மேல் காம்பைக் கொஞ்சமாக வெட்டி, நன்றாக கழுவி தோலை நறுக்காமல் சமைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக போட்டால் சத்து வீணாகாது. ஆவியில் வேகவைப்பதும் சிறந்தது. இதைப் பச்சையாகவோ, வேக வைத்தோபயன்படுத்தும்போது வினிகர் அல்லது எலுமிச்சை ஜுஸ் தடவினால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

உணவுச்சத்து:

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன. பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளை பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல்கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

ஒரு கப் நறுக்கிய பீட்ரூட்டில் உள்ள உணவுச் சத்து:
கலோரி 44, மாவுச்சத்து 10 கிராம், புரதம் ஒரு கிராம், நார்ச்சத்து 5 கிராம், விட்டமின் சி 11 மில்லி கிராம், சோடியம் 72 மி.கி, ஃபோலாசின் 93 மைக்ரோ கிராம்.

மருத்துவப் பலன்கள்:

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால்புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

சமையல் வகைகள்:

பீட்ரூட் சூப்: தேவையான பொருள்கள்: சின்ன பீட்ரூட் 2, சிவப்பு முட்டைக்கோஸ் 1 கப், வெங்காயம் 1, புளிப்பு ஆப்பிள் 1, ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், காரட், உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீர் அல்லது சிக்கன்வேகவைத்த தண்ணீர் 1 கப், தயிர் 100 கிராம்.

செய்முறை: எண்ணெயை சுடவைத்து வெங்காயத்தை வதக்கி, ஆப்பிள், கோஸ், பீட்ரூட் எல்லாவற்றையும் நறுக்கி தக்காளிச்சாறு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து மூடி வைத்துக் கொதிக்கவிட வும். கொதித்ததும் பத்து நிமிடங்கள் தீயைக் குறைத்து விடவும்.தேவைப்பட்டால் மிளகுப்பொடி சேர்த்து சூடாகவோ, ஜில்லென்றோ சாப்பிடலாம்.

பீட்ரூட் அல்வா: தேவையான பொருள்கள்: ஒரு பெரிய அளவு பீட்ரூட், கால் டம்ளர் பால், சர்க்கரை 50 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். நெய் 25 கிராம், முந்திரி, உலர்ந்த திராட்சை தலா ஐந்து.
செய்முறை: பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். அதை பாலில் வேக விடவும். பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும்.

சத்துக்கள் 

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.